சிப் தயாரிப்பில் விஸ்வரூபம்! இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 அதிரடி அறிவிப்பு– பட்ஜெட்டில் அதிரடி!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 11:54 [IST] Share This Article
உலகையே ஆட்டிப்படைக்கும் சிப் (Chip) அரசியலில், இந்தியா இனி வெறும் பார்வையாளர் அல்ல, ஆட்டத்தை மாற்றப்போகும் கேம் சேஞ்சராக மாறப் போகிறது. பட்ஜெட் 2026 உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 அறிவிப்பு, இந்தியாவை உலகளாவிய டெக்னாலஜி மையமாக மாற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். பல ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன், வெறும் சிப் தயாரிப்பு மட்டுமல்லாமல், டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷன் மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் என முழுமையான ஒரு எக்கோ-சிஸ்டத்தை உருவாக்க இந்தியா தயாராகிவிட்டது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இணையாக, 3-நானோமீட்டர் (3nm) தொழில்நுட்பத்தை எட்டும் இலக்குடன் களமிறங்கியுள்ள இந்த திட்டம், லட்சக்கணக்கான திறன்மிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, கார் முதல் ஸ்மார்ட்போன் வரை இந்திய சிப்களை கொண்டு இயங்க செய்யப்போகிறது. சிலிகான் பள்ளத்தாக்கிற்கு போட்டியாக இந்தியா மாறப்போகும் அந்த புதிய அத்தியாயம் இதோ..
இந்தியா தற்போது செமிகண்டக்டர் (சிப்) தயாரிப்பில் ஒரு முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. இதுவரை நாம் சிப்களை வடிவமைப்பதில் உலக அளவில் முன்னணியில் இருந்தோம், அதாவது உலகின் 20% சிப் டிசைனர்கள் இந்தியர்கள் ஆகும். ஆனால் அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள் நம்மிடம் இல்லை.
இந்தியாவின் தற்போதைய நிலை?
2026-ம் ஆண்டு இந்தியாவின் சிப் வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். ஏனெனில் மைக்ரோன், டாடா எலக்ட்ரானிக்ஸ், சிஜி பவர் மற்றும் கெய்ன்ஸ் டெக்னாலஜி ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்களின் வணிக ரீதியான உற்பத்தியை தொடங்க உள்ளன. இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 1.0, 76,000 கோடி ரூபாய் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை, 10 பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் குஜராத், அஸ்ஸாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் சிப் தயாரிப்பு ஆலைகள் மற்றும் பேக்கேஜிங் ஆலைகள் தயாராகி வருகின்றன.
உலகின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை தற்போது சுமார் 45 – 50 பில்லியன் டாலராகும், இந்திய மதிப்பில் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாயாகும். 2030-க்குள் 100 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ISM 2.0 எப்படி உதவும்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 (ISM 2.0), முதல் கட்டத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்து, இந்தியாவை உலகளாவிய சிப் மையமாக மாற்றும் நோக்கம் கொண்டது. இதற்காக சுமார் 20 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல் கட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகம். இதனிடையே இந்தியாவிலேயே சொந்தமாக ஐபி (Intellectual Property) மற்றும் சிப்களை வடிவமைக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் (Design Linked Incentive) உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சிப் நிறுவனங்கள் புதிதாக உருவாகும்.
மேலும் சிப் தயாரிப்பிற்கு தேவையான சிறப்பு ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் இயந்திரங்களை, இந்தியாவிலேயே தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இனி மானியம் வழங்கப்படும். இது இறக்குமதி செலவையும் குறைக்கும். 28-நானோமீட்டர் சிப்களில் தொடங்கி, எதிர்காலத்தில் 3-நானோமீட்டர் மற்றும் 2-நானோமீட்டர் போன்ற அதிநவீன சிப்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் இலக்கு என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும்போது, ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், மற்றும் இராணுவ தளவாடங்களுக்காக இந்தியா, சீனா அல்லது தைவானை நம்பியிருக்க வேண்டிய அவசியம் குறையும். 2035-க்குள் உலகின் டாப் 5 செமிகண்டக்டர் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்.
Share This Article English summary
Budget 2026: FM Nirmala sitharaman says we will launch india semiconductor mission 2.0
In Budget 2026, FM Nirmala Sitharaman announced India Semiconductor Mission 2.0, focused on scaling chip manufacturing, domestic design, and developing a robust global supply chain ecosystem. Story first published: Sunday, February 1, 2026, 11:54 [IST] Other articles published on Feb 1, 2026
