ஏர்டெல் தடாலடி சரிவு! 3 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய இன்ட்ராடே சரிவு! புது அவதாரம் கைகொடுக்குமா?
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 13:58 [IST] Share This Article
இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஜாம்பவான் ஆன பார்தி ஏர்டெல், இப்போது நிதி சேவையிலும் (NBFC) தடம் பதிக்க போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் பங்குச் சந்தையில் ஏர்டெல் பங்குகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன. ஏர்டெல் தனது நிதிச் சேவை பிரிவான ஏர்டெல் மணி (Airtel Money) நிறுவனத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று அதன் பங்குகள் ஒரே நாளில் 4% வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, இந்த மிகப்பெரிய சரிவு ஏன் ஏற்பட்டது? டெலிகாம் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஏர்டெல், கடன் வழங்கும் தொழிலில் இறங்குவது ரிஸ்க் என முதலீட்டாளர்கள் கருதுகிறார்களா அல்லது இது லாபம் ஈட்டுவதற்கான ஒரு நீண்ட கால திட்டமா? பங்குச் சந்தையில் இன்று ஏர்டெல் சந்தித்த இந்தச் சரிவு குறித்து முழுமையான அலசல் இதோ..

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் பங்கு விலையானது இன்று 4% வரை சரிவைக் கண்டு, 1,921 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது. இந்த லெவலில் இம்மாத தொடக்கத்தில் இருந்த நிலையில், இந்த ஒரு நாள் சரிவானது 3 மாதங்களில் இல்லாத அளவாக மோசமான சரிவாகவும் பார்க்கப்படுகிறது. ஏர்டெல் மணி லிமிடெட் நிறுவனத்தை, ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய நிதி நிறுவனமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த சில ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் நிதியையும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
வணிக விரிவாக்க திட்டம் தானே, ஏன் இப்பங்கானது சரிவைக் கண்டு வருகிறது என்ற கேள்வியும் எழலாம். ஆனால் 20,000 கோடி ரூபாய் முதலீடு என்பது மிகப்பெரிய தொகையாகும். இந்த தொகையில் ஏர்டெல் நிறுவனம் நேரடியாக 70% தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது அதன் மற்ற வணிகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் காணப்படுகிறது. அதோடு ஏற்கனவே இப்பிரிவில் ஜியோ, பஜாஜ் பைனான்ஸ் போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், அவர்களுடன் ஏர்டெல் எப்படி போட்டி போடும் என்ற சந்தேகமும் காணப்படுகிறது. இந்த சூழலில் தான் ஏர்டெல் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
15 ஆண்டுகளில் ரூ.5 கோடி சாத்தியமா? உங்கள் கோடீஸ்வர கனவை நனவாக்கும் முதலீட்டு ஃபார்முலா?
இருப்பினும் இந்த சரிவானது தற்காலிகமான ஒன்று கருதும் நிபுணர்கள், ஏர்டெல் நிறுவனம் இதற்கான பலமான அடித்தளத்தை அமைத்துள்ளது என கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி 13, 2026 அன்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதி நிறுவன உரிமம் பெற்ற ஏர்டெல் மணி, ஏர்டெல்லின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்டு, டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்கள் மூலம் இன்னும் சிறப்பாக செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் தனது தளங்கள் மூலம் ஏற்கனவே 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக இன்று பங்கு விலையானது சரிவைக் கண்டாலும், முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு முதலீடு செய்வது நல்லது. வெறுமனே டெலிகாம் சேவையுடன் நிறுத்தாமல், நிதிச் சேவையிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த நினைப்பது, நீண்ட கால அடிப்படையில் அதன் வருவாயை மேம்படுத்த உதவும். இது உண்மையில் சிறந்த வணிக யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆக ஏர்டெல் பங்குகள் சரிவை கண்டிருக்கும் இந்த நேரத்தில், அதை குறைவான விலையில் சிறுக சிறுக வாங்க கிடைத்த நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். நடப்பு ஆண்டு இறுதிக்குள் இப்பங்கானது 2250 ரூபாய் முதல் 2,400 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் தொடர்ந்து வலுவான வாடிக்கையாளர்கள், அதிகரித்து வரும் அர்பு, நிதி நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி என பலவும் சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சரியான ஆலோசனையுடன் திட்டமிடுதல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why did Bharti Airtel shares tank 4% after the NBFC announcement? Is this the right time to buy on dips?
Airtel shares fell 4% following a Rs.20,000 crore NBFC investment plan, marking its steepest intraday decline in three months. Story first published: Tuesday, February 24, 2026, 13:58 [IST] See More On: bharti airtel, பார்தி ஏர்டெல் Other articles published on Feb 24, 2026
