யார் இந்த இந்திய பெண்? ரூ.5000 சம்பளத்தில் தொடங்கி ரூ.3 கோடி வீடு வாங்கியது எப்படி? கனடாவில் மாஸ்!

befunky-collage-2026-01-24t114222-032-1769235227

  செய்திகள்

யார் இந்த இந்திய பெண்? ரூ.5000 சம்பளத்தில் தொடங்கி ரூ.3 கோடி வீடு வாங்கியது எப்படி? கனடாவில் மாஸ்!

News oi-Pugazharasi S By Published: Saturday, January 24, 2026, 11:44 [IST] Share This Article

கனவு காணுங்கள்.. அந்த கனவு உங்களை தூங்க விடாமல் செய்யும் – அப்துல் கலாம் அவர்களின் இந்த வரிகளுக்கு ஒரு நிஜமான உதாரணமாய் திகழ்கிறார் இந்த இந்திய பெண். பெண்கள் நினைத்தால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் கூட பீனிக்ஸ் பறவையாய் எழ முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் ஹிமி ஷர்மா.

2005ம் ஆண்டு MBA படித்துக் கொண்டிருந்தபோது ஹிமி ஷர்மா தனது கணவரை சந்தித்துள்ளார். வெவ்வேறு ஜாதி என்பதால் இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், காதலுக்காக இரண்டு ஆண்டுகள் போராடி இருவரும் மணம் முடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் நகர்ந்தது. ஆனால், அந்த அழகான காதல் கதை விரைவில் ஒரு பிழைப்புக்கான போராட்டமாக மாறியுள்ளது.

யார் இந்த இந்திய பெண்? ரூ.5000 சம்பளத்தில் தொடங்கி ரூ.3 கோடி வீடு வாங்கியது எப்படி? கனடாவில் மாஸ்!

ரூ.3 கோடி சொத்தா? மனைவியா?

நவம்பர் 2010-ல் ஹிமியின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவரது கணவரின் தாய் ஒரு நிபந்தனை விதித்தார். அது 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வேண்டுமா அல்லது காதலித்து திருமணம் செய்த மனைவியா?. அதற்கு ஹிமியின் கணவர் தேர்வு செய்த ஆப்ஷன் தான் அவரை அதிர வைத்துள்ளது. ஏனெனில் அவர் ரத்த பந்தத்தையும், காதலையும் விட 3 கோடி ரூபாய் சொத்தை தேர்வு செய்துள்ளார். சொத்துக்காக ஹிமியையும், இரண்டு வயது மகனையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

ரூ 5,000 சம்பளமும்..போராட்டமும்

கணவர் பிரிந்து சென்றபோது ஹிமி ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவரது மாதச் சம்பளம் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே. கையில் இரண்டு வயது குழந்தை, மிகக் குறைந்த வருமானம், உடைந்த இதயம் எனப் பலமுனைத் தாக்குதல்களை அவர் எதிர்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த உதவியும் இல்லாமல் பல சவால்களை எதிர்கொண்ட ஹிமி, பேயிங் கெஸ்ட் (PG)ஆக விடுதிக்கு குடிபெயர்ந்தார். ஆனால், கொடுமை என்னவென்றால், அந்த விடுதியின் வாடகை அவர் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் அவர் மிகக்குறுகிய காலத்திலேயே கடன் வலையில் சிக்கினார்.

ஆரம்பத்தில், ஒவ்வொரு நாளையும் கடப்பதே பெரும் போராட்டமாக இருந்த நிலையில், மகனுக்கு உணவளிக்கவும், மற்ற செலவுகளுக்காகவும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

தந்தையே கேட்ட வாடகை!

ஒரு வழியாக அங்கு இங்கு போராடி ஒரு பெரிய போர்டிங் பள்ளியில் 30,000 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. பணத்தை சேமிப்பதற்காக தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி சென்றார். ஆனால், அங்கும் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை. சொல்லப்போனால் இன்னும் பிரச்சனை அதிகரிக்கவே செய்திருக்கிறது. ஏனெனில் அவரது தந்தையின் தொழில் நலிவடைந்ததாலும், அவரது சகோதரர் குடும்பத்திற்கு பணம் தராததால், ஹிமியின் தந்தை அவரிடம் மாதம் வாடகையாக 10,000 ரூபாய் தரும்படி கேட்டார். சொந்த வீட்டிலேயே வாடகை கொடுக்கும் அளவுக்கு சுமையாக பார்க்கப்பட்டதாக மன வேதனையை கொண்டுள்ளார். ஆனால் பிரச்சனை அதோடு முடியவில்லை.

நொறுங்கிப் போன இதயம்

பல்வேறு நிதி நெருக்கடியை கொண்டிருந்த ஹிமியால், அவரது மகனின் பள்ளி கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி வகுப்பில் அமர முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியது. அது என் நகைகளை அடகு வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது. என்னால் இனி பள்ளிக்கு செல்ல முடியுமா என்று என் மகன் கேட்ட போது என் இதயம் சுக்கு நூறாக உடைந்தது என்கிறார் ஹிமி.

பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் அவர் ஒதுக்கப்பட்டார். விவாகரத்து பெற்ற பெண் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண் என்ற முத்திரை குத்தப்பட்டு, குடும்ப திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் அவர் தவிர்க்கப்பட்டார். அதேசமயம் மறுபுறம், வருமானத்திற்காக மாலை 6 மணி வரை வேலை, அதன் பிறகு கூடுதல் நேர டியூஷன் என கடின உழைப்பை கொடுத்துள்ளார். சில சமயங்களில் இருட்டில் 20 கிலோமீட்டர் வரை நடந்தே வீடு திரும்பிய நாட்களும் உண்டு என்கிறார்.

கனடா பயணம்: ஒரு புதிய தொடக்கம்

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுத்தார். கையில் சேமிப்பாக 2 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தபோது, கனடா விசாவுக்கு விண்ணப்பித்தார். நீ தோற்றுவிடுவாய் என்றுதான் அனைவரும் சொன்னார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். 2019-ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஹிமி, சென்ற ஒரே மாதத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். ஆதரவு இல்லாத புதிய நாட்டில், கொஞ்சம் கொஞ்சமாக தனது வாழ்க்கையை செதுக்கத் தொடங்கினார்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு ஹிமியின் கதை ஒரு மிகச்சிறந்த உதாரணம். அன்று எந்த 3 கோடி சொத்துக்காக அவர் கணவனால் கைவிடப்பட்டாரோ, இன்று அதே 3 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டிற்கு அவரே எஜமானியாகி இருக்கிறார். ஆனால், இந்த முறை அந்த சொத்து யாருடைய பிச்சையோ அல்லது வரதட்சணையோ அல்ல. அது அவரது ரத்தமும் வியர்வையும் கலந்த சொந்த உழைப்பு!. ஆக எந்த பிரச்சனையை கண்டும் சோர்ந்து விடாமல் உழைப்பை மட்டுமே நம்புபவர்களுக்கு என்றும் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

Share This Article English summary

success story: How does a single mother go from earning Rs 5,000 to owning a Rs 3 crore home in Canada?

Abandoned for property, Himi Sharma rose from a Rs. 5,000 salary to owning a Rs 3 crore Canadian home, proving that self-reliance is the ultimate success story. Story first published: Saturday, January 24, 2026, 11:44 [IST] Other articles published on Jan 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *