Breaking: 8 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி: ஒரே நாளில் 713 பங்குகள் அதல பாதாளத்திற்கு சென்றது ஏன்?

befunky-collage-2026-01-20t174359-425-1768911303

  Market update

8 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி: ஒரே நாளில் 713 பங்குகள் அதல பாதாளத்திற்கு சென்றது ஏன்?

Market Update oi-Pugazharasi S By Published: Tuesday, January 20, 2026, 17:45 [IST] Share This Article

ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம்பி விதைத்த விதைகள், ஒரே ஒரு நாள் பேய் மழையில் அடித்துச் செல்லப்பட்டால் அந்த விவசாயியின் மனம் எவ்வளவு பதறுமோ.. அதே போன்ற ஒரு சூழலில்தான் இன்று இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.

கடந்த எட்டு மாதங்களாக பார்த்து பார்த்து செதுக்கிய லாபங்கள் அனைத்தும், இன்று வெறும் சில மணி நேரங்களில் கரைந்து போய்விட்டன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து விழ, மறுபுறம் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட 700-க்கும் மேற்பட்ட பங்குகளின் விலை, தங்களது ஒரு வருட கால குறைந்தபட்ச விலைக்கு (52-week low) சென்றிருப்பது சாதாரண விஷயமல்ல.

8 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி: ஒரே நாளில் 713 பங்குகள் அதல பாதாளத்திற்கு சென்றது ஏன்?

நாலா பக்கமும் அடி!

அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பு எச்சரிக்கைகள் ஒருபுறம், இந்தியப் பங்குகளிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் (FIIs) கோடிக்கணக்கான ரூபாய்களை தொடர்ந்து வெளியேற்றுவது மறுபுறம் என சந்தையை நாலாபுறம் இருந்தும் அழுத்தங்கள் சூழ்ந்துள்ளன. இந்த சூழலில் தான் யாரும் எதிர்பார்த்திராத அளவு ஒரு நாள் வீழ்ச்சியை சந்தையானது கண்டுள்ளது. இது திரும்ப எப்போது ஏறும்? எப்போது சந்தை மேற்கண்ட அழுத்தங்களில் இருந்து மீளும் என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று பெரிய அளவில் லாபம் பார்த்து விடலாம் என்று ஏங்கிய கண்களுக்கு, இன்றைய சிவப்பு நிற வர்த்தகம் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

இது வெறும் சந்தை திருத்தமா அல்லது ஒரு பெரிய பொருளாதாரப் புயலின் தொடக்கமா? உங்கள் கடின உழைப்பின் பலனான முதலீட்டைப் பாதுகாக்க இப்போது நீங்கள் எதை கவனிக்க வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

இரு நாளில் இவ்வளவு இழப்பா?

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 2.5% மேலாக சரிவைக் கண்டுள்ளன. லார்ஜ் கேப் நிறுவனங்களை விட மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த சூழலில் பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமையன்று 468 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 456 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது. வெறும் இரண்டே நாட்களில் முதலீட்டாளர்கள் 12 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

என்னென்ன பங்குகள் வீழ்ச்சி?

நிஃப்டி 50 குறியீட்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் (0.46% உயர்வு), ஹெச்டிஎஃப்சி வங்கி (0.28% உயர்வு) மற்றும் டாடா கன்ஸ்யூமர் (0.28% உயர்வு) ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிவடைந்தன. மறுபுறம் அதானி எண்டர்பிரைசஸ் (3.96% சரிவு), பஜாஜ் பைனான்ஸ் (3.89% சரிவு) மற்றும் ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (3.72% சரிவு) ஆகியவை இந்த குறியீட்டில் அதிக இழப்பை சந்தித்த பங்குகளாக முடிவடைந்தன.

பிஎஸ்இ (BSE) சந்தையில் மட்டும் சுமார் 713 பங்குகள் தங்களது ஒரு வருட கால குறைந்தபட்ச விலையை (52-week low) இன்று தொட்டுள்ளன. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவெனில் சென்செக்ஸின் முன்னணி பங்குகளான ஐடிசி மற்றும் ட்ரெண்ட் ஆகியவையே தங்களது 52 வார கால சரிவைச் சந்தித்துள்ளன.

பட்டியலில் உள்ள மற்ற முன்னணி நிறுவனங்களில் இந்தியன் ஹோட்டல்ஸ், ஐஆர்சிடிசி, பி & ஜி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், அதானி டோட்டல் கேஸ், கோத்ரேஜ் பிராபர்டீஸ், லோதா டெவலப்பர்ஸ், பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், எல்&டி டெக்னாலஜிஸ், மேன்கைண்ட் பார்மா உள்ளிட்ட பங்குகளும் அடங்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Why did over 700 stocks hit 52-week lows as Sensex witnessed its biggest single-day fall in 8 months?

Sensex plunged today due to escalating global trade war fears following US tariff threats, persistent foreign fund outflows, and disappointing Q3 earnings, wiping out Rs 12 lakh crore. Story first published: Tuesday, January 20, 2026, 17:45 [IST] Other articles published on Jan 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *