மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! சாட்டையை கையில் எடுத்த மத்திய அரசு!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 8:38 [IST] Share This Article
நமக்கு ஒரு அவசர மருத்துவ தேவை வரும்போது பெரிய அளவில் கை கொடுப்பவை தான் மருத்துவ காப்பீடு திட்டங்கள். திடீரென ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சினைகளுக்கும் அது சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கும் லட்சக்கணக்கில் உடனடியாக நம்மால் பணம் ரெடி பண்ண முடியாது. மருத்துவ காப்பீடு இருக்கிறது என்றால் சிகிச்சை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை அந்த பணத்தேவையை மருத்துவ காப்பீடு திட்டமே பார்த்துக் கொள்ளும்.
இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகளே ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டின் ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தான் அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் கிடைக்கும். அதற்கு மேல் வருமானம் கொண்ட குடும்பங்கள் கட்டாயம் தனியாரிடம் மருத்துவ காப்பீடு திட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

இந்தியாவில் மருத்துவ பணவீக்கம் 2026ஆம் ஆண்டில் 11.5% ஆக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை. அதாவது இந்த ஆண்டில் ஒரு சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்தால் 2026ஆம் ஆண்டில் அந்த சிகிச்சைக்கான செலவு 1,11,500 ரூபாய் என அதிகரிக்கும். கொரோனா காலத்திற்கு பிறகு திடீரென உடல்நல குறைவுகள் ஏற்படுவது அதிகரித்து இருப்பதால் மருத்துவ காப்பீடு பெறுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஆனால் மருத்துவ காப்பீடு வழங்க கூடிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் பிரீமியம் தொகையை உயர்த்துவது, கிளைம்களை நிராகரிப்பது என வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் நடைமுறைகளையே கையாளுகின்றன.
Also Read
மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா?
குறிப்பாக மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகைகள் அடிக்கடி உயர்த்தப்படுவதாக அரசுக்கு புகார் வந்துள்ளது. அண்மையில் தான் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு தந்தது. இதன் மூலம் பிரீமியம் தொகை குறைந்து பலரும் மருத்துவ காப்பீடு பெற முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துவ காப்பீடு பெற மக்கள் முன்வராமல் இருப்பது அதிகபட்ச பிரீமியம் தொகை தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில் மத்திய அரசு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை குழுக்களோடு ஆலோசனை நடத்தி இருக்கிறது. அந்த ஆலோசனையில் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது, உரிமை கோரல்களை முழுவதும் டிஜிட்டல் மயமாக்குவது என்பன உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
Recommended For You
வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!
எனவே கூடிய விரைவில் மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகைகள் அடிக்கடி உயராத வண்ணம் கட்டுப்பாடு விதிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது . இது தொடர்பான பரிந்துரைகளை அரசு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. அடிக்கடி பிரீமியம் தொகையை உயர்த்த கூடாது, கிளைம் செட்டில்மெண்டில் வெளிப்படை தன்மை, டிஜிட்டல் முறைக்கு மாறுவது , பிரீமியம் தொகையில் ஏஜென்ட் கமிஷனுக்கு வரம்பு ஆகிய பரிந்துரைகளை அரசு முன்வைத்துள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐ இவற்றை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இந்த பரிந்துரைகள் மீது அதிகாரப்பூர்வ முடிவினை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிக எண்ணிக்கையில் மருத்துவ காப்பீட்டு கிளைம்கள் நிராகரிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஆர்டிஏஐ அதிகாரிகள் கூறி இருந்தனர்.
Share This Article English summary
Caps on Medical insurance premiums? Government plans for huge change
The Central government plans for caps on medical insurance premiums, has begun discussions with the insurance regulator, industry executives and hospital groups. Story first published: Wednesday, November 19, 2025, 8:38 [IST] Other articles published on Nov 19, 2025
