AI bubble வெடிக்க போகுதா..? டெக் ஊழியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை ரத்த கண்ணீர்..!!
News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, November 17, 2025, 13:57 [IST] Share This Article
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் இருக்கும் காரணத்தால் பல ஏஐ நிறுவனங்கள் தோல்வி அடைந்து வருவதால் ஏஐ பபுள் உருவாகியிருப்பதாக அச்சம் உருவாகியுள்ளது. இந்த ஏஐ முயற்சிகள், முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தையும், வருமானத்தையும் கொடுக்காவிடில் ஏஐ பபுள் வெடித்துவிடும். இதனால் என்ன ஆகும்.?
ஏஐ துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் பலன் அளிக்கவில்லை எனில் இதில் முதலீடு செய்துள்ள டெக் தலைவர்களும், முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பை எதிர்கொள்வார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும், உதாரணமாக டெக் ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள், பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும், முதலீட்டாளர்களும், வங்கிகளும் பெரும் இழப்பை எதிர்கொள்ளும். சாம் ஆல்ட்மேன் கூறுகையில் ஏஐ துறையில் தடுமாற்றம் மோசமாக இருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரமே சரியும் என எச்சரித்துள்ளார்.

மேலும் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் AI CapEx அறிக்கையில், தற்போது செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் பெற வேண்டும் என்றால் வருடத்திற்கு 650 பில்லியன் டாலர் வருமானத்தை 2030க்குள் ஈட்ட வேண்டும். இது மிகப்பெரிய தொகை என பல வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பம், உச்சத்தில் இருக்கும் போது, சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் சாப்ட்பேங்க் தன்னிடம் இருந்த என்விடியா பங்குகளை மொத்தமாக 5.8 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறியது. இது டெக் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சாப்ட்பேங்க் CFO அதிகாரியான Yoshimitsu Goto-யிடம் ஏஐ பபுள் வெடிக்கப்போகிறதா..? அதனால் தான் என்விடியா பங்குகளை விற்கப்பட்டு உள்ளதா..? என கேட்டதற்கு.. அவர், ஏஐ துறை தற்போது பபுள் நிலையில் உள்ளதா என என்னால் தற்போது சொல்ல முடியாது. ஆனால் இந்த என்விடியா பங்கு விற்பனைக்கும் ஏஐ பபுள் வெடிப்பு அச்சத்திற்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார்.
இந்த பபுள் என்பது ஏஐ துறையில் மட்டும் அல்ல, அனைத்து துறையிலும் நடக்கும். அதாவது எப்போதெல்லாம் அளவுக்கு அதிகமாக முதலீட்டை பெற்று, லாபம் அல்லது வருமானம் ஈட்ட முடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் இந்த பபுள் வெடிக்கும்.
உதரணமாக 2007-08 நிதியியல் நெருக்கடி, டாட்காம் பபுள், UnderSea Cables, பிராண்ட்பேன்ட் துறையிவ் செய்யப்பட்ட முதலீடுகள் ஆரம்பத்தில் நீர் குமுழியாக உருவாகி, வெடித்து முதலீடு அனைத்தும் ஜீரோவானது. இதேபோல தான் ஏஐ துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் சரியான முறையில் லாபம் – வருவாய் அளிக்கமுடியாமல் பபுளில் மாட்டிக்கொண்டு உள்ளது.

மேக்னிஃபிசன்ட் 7 நிறுவனங்கள்:
அமெரிக்க பங்குச் சந்தையின் மிகப்பெரிய ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ‘மேக்னிஃபிசன்ட் 7’ அல்லது ‘மேக் 7’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்-ல் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ஆல்ஃபாபெட், அமேசான், என்விடியா, மெட்டா மற்றும் டெஸ்லா ஆகியவை உள்ளது. கடந்த 10 வருடமாக இந்தக் 7 நிறுவனங்கள் தான் அமெரிக்க பங்குச்சந்தைகளை வழிநடத்தி வருகிறது.
இந்த 7 நிறுவனங்களின் வெற்றிக்கு ஒரு காரணம் உள்ளது. இவை அனைத்தும் இதுநாள் வரையில் குறைந்த ஆபத்து கொண்ட வணிக மாடலில் இயங்கி வந்தன, தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உச்ச நிலையை அடைந்தனர். இதற்கு மத்தியில்
மேக் 7 நிறுவனங்கள் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் இன்னோவேஷன் மூலம் போட்டி நிறுவனங்களை ஓடவிட்டு அவரவர் துறையில் ஒரு மோனோபோலியாக மாறியுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் இதன் வளர்ச்சிக்கு எவ்விதமான குறையும் இல்லாமல் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
ஆனால் இப்போது இந்த 7 நிறுவனங்களும் ஏஐ-யில் பெரும் தொகையை மூலதனமாக வைத்து புதிய வணிக மாதிரியை உருவாக்கி வருகிறது. எந்த ஒரு துறையாக இருந்தாலும் முதலீடு செய்யும் போது உற்பத்தி அதிகரித்து, லாபமும்- வருமானமும் அதிகரிக்கும். ஆனால் ஏஐ முதலீட்டில் அப்படி நடக்கவில்லை என்பது தான் தற்போதைய பிரச்சனையாக உள்ளது.

ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது, மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது, ஆனால் ஏஐ-க்கான முதலீட்டில் இருந்து வருமானம் எந்த அளவுக்கு வருகிறது என்பதில் தான் பிரச்சனை உள்ளது. முதலீட்டு சந்தைகள் இத்தகைய நிலையை எப்போது விரும்பாது என்பது தான் சோகமான விஷயமாகும். ஏஐ பபுளின் அடிப்படை பிரச்சினை, இதில் செய்யப்படும் கேபெக்ஸ் போதிய வருவாயைத் தருமா என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதனால், முன்பு சேவை மையமாக இருந்த மேக் 7 நிறுவனங்கள் இப்போது பெரிய சொத்துகள் கொண்டவையாக மாறுகின்றன. இதனால் 2007-08 நிதி நெருக்கடி போல் ஏஐ பபுள் வெடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்ற அச்சம் சந்தையில் அதிகமாக உள்ளது என நிதியியல் ஆலோசகரான ஷங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.
நீண்ட கால முதலீடு ஆபத்து:
கேபெக்ஸ் அதிகமுள்ள எந்த துறையின் வளர்ச்சியும் இறுதியில் மோசமாக முடியும் என ஷங்கர் சர்மா எச்சரித்தார். அவர் ஏஐ தொடர்புடைய எந்த டெக் நிறுவனத்திலும் ஐந்து ஆண்டுகள் என்ற நீண்ட கால முதலீட்டை செய்ய மாட்டேன் என கூறுகிறார்.
தற்போது ஏஐ துறையில் இயங்கி வரும் டெக் நிறுவனங்கள், தொடர்ந்து தனது வர்த்தக மாடலை பெரிய அளவில் மாற்றி வருகின்றன, அதிக மூலதனச் செலவு கொண்டு குறைந்த வருவாய் கொண்ட இத்தகைய துறையில் ஐந்து ஆண்டுகள் கொண்ட நீண்ட கால பார்வைக்கு தகுதியற்றவை என நெற்றி பொட்டில் அடித்தார் போல் தெரிவித்துள்ளார் ஷங்கர்.
தற்போது இந்தியா முதல் அமெரிக்கா வரையில் ஏஐ துறையில் பெரும் தொகை தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலீட்டுக்கு ஏற்ப வாக்குறுதிகளை நிறைவேறாவிட்டால், ஏஐ துறையில் உருவாகியுள்ள பபுள் கட்டாயம் வெடிக்கும். இதனால் டெக் துறை பாதிப்பை தாண்டி பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்பது தான் தற்போது அனைவரையும் பயமுறுத்தும் விஷயமாக உள்ளது.
Share This Article English summary
Is AI Bubble is real? How MAG 7 Companies going to affect economy?
Is AI Bubble is real? How MAG 7 Companies going to affect economy? Story first published: Monday, November 17, 2025, 13:57 [IST] Other articles published on Nov 17, 2025