மாதம் ரூ. 20,000 வருமானம் தரும் அசத்தல் ஸ்கீம் – ரிஸ்கில்லா அஞ்சலக திட்டத்தில் நீங்க சேர்ந்தாச்சா?

befunky-collage55-1766061650

  பர்சனல் பைனான்ஸ்

மாதம் ரூ. 20,000 வருமானம் தரும் அசத்தல் ஸ்கீம் – ரிஸ்கில்லா அஞ்சலக திட்டத்தில் நீங்க சேர்ந்தாச்சா?

Personal Finance oi-Pugazharasi S By Published: Thursday, December 18, 2025, 18:11 [IST] Share This Article

பணி ஓய்வுக்குப் பிறகு கையில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டுமா? அதே சமயம், மாதம் ஒரு பெரிய தொகை கைநிறைய வருமானமாக வர வேண்டுமா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).

சந்தை அபாயங்கள் எதுவுமின்றி, மத்திய அரசின் முழு பாதுகாப்புடன், வங்கிகளை விட அதிக வட்டி தரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், நீங்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் 20,000 ரூபாய் வரை சம்பளம் போல் வருமானம் பெற முடியும். அது எப்படி சாத்தியம்? எவ்வளவு முதலீடு செய்தால் இந்தத் தொகை கிடைக்கும்? யாருக்கெல்லாம் இந்தத் திட்டம் பொருந்தும்? உங்கள் ரிடையர்மென்ட் காலத்தை ராஜாவாக கழிக்க உதவும் இந்தத் திட்டத்தின் முழு ரகசியங்களையும் இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

மாதம் ரூ. 20,000 வருமானம் தரும் அசத்தல் ஸ்கீம் – ரிஸ்கில்லா அஞ்சலக திட்டத்தில் நீங்க சேர்ந்தாச்சா?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்!

· மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதம் கிடைக்கிறது. இது வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிகம்.

· அரசின் பாதுகாப்புடன் செயல்படுவதால் உங்கள் பணத்திற்கு 100% பாதுகாப்பு உண்டு.

· மூத்த குடிமக்களுக்கு மேற்கொண்டு சலுகை அளிக்கும் விதமாக 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது.

· மாத மாதம் சம்பளம் போன்று வருமானம் கிடைப்பதால், வயதான காலத்தில் நிதி ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

· இந்த திட்டத்தில் தனியார் ஊழியர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், குடும்பத் தலைவிகள் என யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் வயது வரம்பானது 60 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். 60 வயதுக்கு கீழ் மற்றவர்கள், அஞ்சலகத்தில் மற்ற திட்டங்களின் மூலம் இணைந்து பயன் பெறலாம்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

குறைந்தபட்ச முதலீடு: ஒருவர் இந்த எஸ்.சி.எஸ்.எஸ்(SCSS) திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்து முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஆயிரத்தின் மடங்கில் முதலீடு செய்ய வேண்டும்.

அதிகபட்ச முதலீடு: ஒரு தனி நபர் அல்லது கூட்டுக் கணக்கு மூலம், இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருந்தாலும், எல்லா கணக்குகளையும் சேர்த்து மொத்தம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

வட்டி விகிதம்?

அஞ்சலகத்தின் பிரபல திட்டங்களில் ஒன்றான இந்த மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு வட்டி விகிதம் தற்போதைய சூழலில் 8.2% ஆகும். இது திட்டத்தில் வெறும் பாதுகாப்பு கருதி மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை. மாறாக மாத மாதம் சம்பளம் போன்ற வருமானம் கிடைப்பது பெரிய பலனளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக வயதான காலத்தில் ஒருவர் தன்னுடைய ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க உதவுகிறது. இதில் நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் மனைவியுடன்/கணவருடன் இணைந்தோ இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

கூட்டாக கணக்கு தொடங்கும் போது, முதல் விண்ணப்பதாரர் மட்டுமே வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். இரண்டாம் விண்ணப்பதாரருக்கு (மனைவி/கணவர்) வயது வரம்பு கிடையாது. நாமினி வசதியும் உண்டு. அதை கணக்குத் தொடங்கும்போதோ அல்லது அதற்குப் பிறகோ ஒருவரை வாரிசுதாரராக நியமித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

வயது வரம்பு?

பொதுவாக இந்த திட்டத்தில் இணைய 60 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் தாராளமாக இணையலாம். ஆனால் 55 முதல் 60 வயது வரை உள்ள விருப்ப ஓய்வு (VRS ) பெற்றவர்கள் அல்லது சூப்பர் அனுவேஷன் முறையில் ஓய்வு பெற்றிருந்தால், நீங்களும் இதில் முதலீடு செய்யலாம். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு. அதாவது ஓய்வு கால பலன்கள் கிடைத்த 1 மாதத்திற்குள் இந்தத் திட்டத்தில் சேர வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 50 வயது பூர்த்தியடைந்தாலே, இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். இந்த திட்டத்திலும் ஓய்வுகால பலன்கள் கிடைத்த 1 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முன்கூட்டியே முடித்தால் அபராதமா?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க முதிர்வு காலம் வரையில் தொடர வேண்டும். ஒரு வேளை தவிர்க்க முடியாத சூழலில், பணத்தை எடுக்க வேண்டிய சூழல் வந்தாலும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், உங்கள் கணக்கை தொடங்கிய காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட அளவு அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த கணக்கை தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் நீங்கள் பணத்தை எடுத்தால், எந்த வட்டியும் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே உங்களுக்கு வட்டி வழங்கப்பட்டிருந்தால், அந்த தொகை உங்கள் அசல் பணத்திலிருந்து கழிக்கப்பட்டு, மீதித் தொகை மட்டுமே உங்களுக்குத் தரப்படும்.

இதே ஓராண்டு முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், உங்கள் அசல் தொகையிலிருந்து 1.5% அபராதமாக பிடிக்கப்படும். இதே இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு, 5 ஆண்டுகளுக்குள் எப்போது கணக்கை முடித்தாலும், உங்கள் அசல் தொகையிலிருந்து 1% அபராதமாக பிடிக்கப்படும். இதுவே தவிர்க்க முடியாத சூழலில், ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்த தேதியிலேயே கணக்கு முடித்துக் கொள்ளப்படும். இதற்கு எந்தவித அபராதமும் கிடையாது. வாரிசுதாரர் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாதம் ரூ.20 சாத்தியமா?

ஒருவர் இந்த திட்டத்தில் 30 லட்சம் முதலீடு செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம். தற்போது வட்டி விகிதம் 8.2% என்பதால், அவரின் வருமானம் சுமார் 2.46 லட்சம் ரூபாயாக இருக்கும். இதை மாதத்திற்கு கணக்கிட்டால் மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் பெற முடியும். ஆனால் இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். ஆக மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் வட்டியை மாதம் சராசரியாக 20,000 ரூபாயாக எடுத்துக் கொள்ளலாம். ஆக ஓய்வுகாலத்திலும் மாதம் 20,000 ரூபாய் வருமானம் என்பது சாத்தியமான ஒன்று தான்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How to get Rs 20,000 per month from SCSS? Explore its key benefits and rules

Senior Citizen Savings Scheme is a government-backed, low-risk investment for those aged 60+. It offers a high interest rate (currently 8.2%), quarterly payouts, and 100% capital safety Story first published: Thursday, December 18, 2025, 18:11 [IST] Other articles published on Dec 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *