பட்ஜெட்-க்கு முன் மாபெரும் அறிவிப்பு.. மோடி – நிர்மலா போட்ட மாஸ்டர்பிளான்..!
Msme oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 9:33 [IST] Share This Article
மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்ட மத்திய அரசு ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிட்பி (SIDBI) வங்கிக்கு ரூ. 5,000 கோடி கூடுதல் மூலதனத்தை வழங்குவதன் மூலம், தொழில் முனைவோருக்குத் தடையற்ற கடன் வசதி கிடைப்பதை உறுதி செய்ய மோடி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் இந்த நிதி ஒதுக்கீடு, பட்ஜெட்டுக்கு முந்தைய ஒரு மெகா ட்ரீட் ஆக பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, மூலதனத் தேவைகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான சிறு தொழில்முனைவோருக்கு இந்த நிதி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த கூடுதல் மூலதனம் மூலம், சிட்பி வங்கி குறைந்த வட்டியில் அதிக கடன்களை வழங்க வழிவகை ஏற்படும். இது நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் பெரும் உதவியாக இருக்கும். மொத்தத்தில் எம்.எஸ்.எம்.இ-களுக்கு மத்திய அரசின் மெகா பூஸ்டர் எனலாம்.
எம்.எஸ்.எம்.இ-களை ஊக்குவிக்கும் பூஸ்டர்!
மத்திய அமைச்சரவை சிட்பி வங்கியில் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் கொடுத்துள்ளது. இது ஒரே தவணையாக இல்லாமல், வரும் மூன்று ஆண்டுகளில், மூன்று கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2025 – 26ம் நிதியாண்டில் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், அதைத் தொடர்ந்து 2026 – 2027ம் நிதியாண்டு மற்றும் 2027- 2028ம் நிதியாண்டுகளில் முறையே தலா 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உந்து சக்தியாகவும் இருக்கும்.
பலன் என்ன!
மத்திய அரசின் இந்த அதிரடி முடிவால், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ(MSME) ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் ஏற்படலாம். தற்போது (2025-ன் முடிவில்) சுமார் 76.26 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் சிட்பி வங்கியிடம் நிதி உதவி பெற்று வருகின்றன. இந்த 5,000 கோடி ரூபாய் நிதி ஊக்கத்திற்கு பிறகு, 2028-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 1.02 கோடியாக உயரும். அதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 25.74 லட்சம் புதிய நிறுவனங்கள் வங்கியின் நிதி வளையத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 6.90 கோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், தற்போது சுமார் 30.16 கோடி பேருக்கு வேலை வழங்குகின்றன. ஒரு சிறு நிறுவனம் சராசரியாக 4.37 நபர்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்தச் சராசரியைக் கணக்கிடும்போது, புதிதாக இணையப்போகும் 25.74 லட்சம் நிறுவனங்கள் மூலம் 2027-28-க்குள் சுமார் 1.12 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share This Article English summary
How will the government’s Rs 5,000 crore infusion into SIDBI boost credit access for MSMEs?
Government’s Rs 5,000 crore SIDBI infusion aims to add 25.74 lakh MSME beneficiaries, potentially creating 1.12 crore new jobs. Story first published: Thursday, January 22, 2026, 9:33 [IST] Other articles published on Jan 22, 2026
