நிம்மதி முக்கியம் பிகிலு! கார்ப்பரேட் அடிமைத்தனத்திற்கு டாட்டா காட்டி ஆட்டோ டிரைவரான MNC ஊழியர்!

befunky-collage-2026-01-24t111551-954-1769233575

  செய்திகள்

நிம்மதி முக்கியம் பிகிலு! கார்ப்பரேட் அடிமைத்தனத்திற்கு டாட்டா காட்டி ஆட்டோ டிரைவரான MNC ஊழியர்!

News oi-Pugazharasi S By Published: Saturday, January 24, 2026, 11:16 [IST] Share This Article

லட்சங்களில் சம்பளம், ஏசி அறை, கௌரவமான பதவி, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு கனவு வாழ்க்கை. ஆனால், அந்த நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கார்ப்பரேட் அரசியல், அதிகாரத் தோரணை மற்றும் மன அழுத்தத்திற்கு நடுவில் தன் ஆன்மாவை தொலைத்த ஒரு மனிதனின் கதைதான் இது.

பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ், பல முன்னணி பன்னாட்டு நிறுவனத்தில் உயர்மட்டப் பதவியில் இருந்தவர். மேலாளர்கள் என்பவர்கள் ஊக்கப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும், ஆனால் இன்று பலர் ஊக்கத்தை அழிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று வெடித்த ராகேஷ், தன் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

நிம்மதி முக்கியம் பிகிலு! கார்ப்பரேட் அடிமைத்தனத்திற்கு டாட்டா காட்டி ஆட்டோ டிரைவரான MNC ஊழியர்!

லட்ச ரூபாய் சம்பளத்தை தூக்கியெறிந்துவிட்டு, பெங்களூருவின் பரபரப்பான சாலைகளில் ஆட்டோ டிரைவராக மாறிய ராகேஷின் இந்த பயணம், வெறும் வேலை மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு கார்ப்பரேட் அடிமை சுதந்திர மனிதனாக மாறிய கதை. இது சற்று பழையது தான் என்றாலும், ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

கார்ப்பரேட் ஊழியர்!

ஒரு மனிதனுக்கு பணம் தேவைதான், ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல. இழந்தது கௌரவமான வேலையாக இருக்கலாம், ஆனால் மீட்டெடுத்தது என் தொலைந்துபோன நிம்மதியை என்று அவர் கூறும் வார்த்தைகள், ஒவ்வொரு கார்ப்பரேட் ஊழியரும் தன் இதயத்தில் கைவைத்து யோசிக்க வேண்டியவை. ஏன் இன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் கவுரமாக வலம் வரும் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப சூழலுக்காகவும், பணத் தேவைக்காகவும் நிம்மதியை தொலைத்து அலைகிறார்கள். ராகேஷ் ஒரு தாசப்தத்திற்கும் மேலாக பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர். பெங்களூருவில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வாய்ஸ் அண்ட் அக்சென்ட் ட்ரைனராக தனது பணியைத் தொடங்கி, படிப்படியாக கார்ப்பரேட் ஏணியில் உயரே சென்றவர்.

ராகேஷின் அனுபவம்?

இது குறித்து அவரின் வீடியோ ஒன்றில், நான் பதவிகளில் மேலே செல்லச் செல்ல, சூழல் மிகவும் கடினமானது. இதற்கான நான் நிறுவனங்களைச் கூட மாற்றிப் பார்த்தேன். ஆனால் எல்லா இடங்களிலும் சூழ்ச்சி மற்றும் கையாளுதல் இருந்தது, கடின உழைப்புக்கு தக்க பலன் கிடைக்கும் நம்பித்தான் பணியாற்றுகிறோம். ஆனால் உங்கள் மேலதிகாரிக்கே, உங்களை பார்த்து பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டால் என்ன நடக்கும். அவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக, உங்களை மட்டம் தட்டவும், வளர்ச்சியை தடுக்கவும் ஆரம்பிப்பார். அதை ஒருவரால் எவ்வளவு காலம் தான் சகித்துக் கொள்ள முடியும்.

எது உங்களுடைய வேலை இல்லையோ, அதை செய்யுமாறு நீங்கள் அடிக்கடி கட்டாயப்படுத்தப் படுவீடுகள். நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் கடின உழைப்பை பாராட்டலாம். ஆனால் மேலாளர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு புகழ்பெற்ற சர்வதேச வங்கியில் பணியாற்றிய போது, ராகேஷிற்கு தன் மீது மிகுந்த பாதுகாப்பற்ற உணர்வு கொண்ட ஒரு மேலாளர், அவரை பற்றி தவறான வதந்திகளை பரப்பியிருக்கிறார். அதற்கு எதிராக குரல் கொடுத்தாலும், அதிகாரம், ராகேஷிற்கு எதிராக இருந்திருக்கிறது. தனது மேலாளரின் இந்த கீழ்த்தரமான போக்கை பற்றி ராகேஷ் உயர்மட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, அவருக்கு கிடைத்த பதில் பெரும் ஏமாற்றமே. அவர்கள் உண்மையை ஆராய்வதை விட, அந்த மேலாளரை பாதுகாப்பதையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

மோசமான அனுபவம் இது!

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த சர்வதேச வங்கியில் ராகேஷ் செய்த வேலை மிகத் துல்லியமான கவனிப்பையும் நேர்மையையும் கோருவது. இது Catch Me If You Can திரைப்படத்தில் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) ஏற்ற மோசடி தடுப்பு கதாபாத்திரத்தைப் போன்றதாம். சிறு நிறுத்தற்குறி தவறுகள் அல்லது கையொப்பங்களில் உள்ள முரண்பாடுகள் என மிகச்சிறிய பிழைகளை கூட துருவித் துருவி ஆராய்வதே. ஏதாவது ஒரு முரண்பாட்டை கண்டால், சம்பந்தப்பட்ட நபரை அழைத்து நான் கேள்வி கேட்க வேண்டும். அவ்வளவு நேர்மையாக பணியாற்றியும், அவரின் பதவி உயர்வைத் தடுப்பதற்காக, செய்யாத தவறுகளை ராகேஷ் மீது சுமத்தியுள்ளார்கள்.

உடல்நலம் மற்றும் சக ஊழியர்களின் கொடூர புத்தி?

அலுவலகத்தில் கடும் சவால்களை எதிர்கொண்டு வந்த அதே காலகட்டத்தில், ராகேஷ் ஒரு கடுமையான செவித்திறன் குறைபாட்டை கையாண்டு கொண்டிருந்தார். அவர் செவிப்புலன் கருவியை அணிந்திருந்தார். இதுகுறித்து பலரும், அவரை பார்த்து ரகசியம் பேசுவதும், கேலி செய்வதுமாக இருந்துள்ளனர். அவரின் அறுவை சிகிச்சைக்குப் பின் செவிப்புலன் கருவியை அணிவதை நிறுத்தும் வரை, கார்ப்பரேட் உலகில் இதுபோன்ற விஷயங்கள் கூட உங்கள் நிம்மதியைப் பாதிக்கும். மனிதர்கள் அவ்வளவு இரக்கமற்றவர்கள் என்கிறார்.

காலப்போக்கில் வேலைப்பளு தாங்க முடியாததாக மாறியது. நிறுவனங்களின் டார்கெட்டுகள் ஒருவரை நசுக்கி விடுகின்றன. இலக்குகள் என்பவை ஒருவருடைய திறமை அல்லது தனிப்பட்ட ஆற்றலோடு எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மனிதர்கள் வெறும் இயந்திரங்களாக மட்டுமே நடத்தப்பட்டனர். இந்த சூழல் கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளியது. வேலையை விட அவருக்கு விருப்பமில்லை, ஆனால் தனது வாழ்க்கையை நரகமாக்கத் துடிக்கும் ஒரு மேலாளரின் கீழ் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.

இருண்ட காலம் மற்றும் மாற்றம்

இதுபோன்ற பல அழுத்தங்களால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக ராகேஷ் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. படுக்கையிலேயே உணவு, மனிதர்களை தவிர்த்தல் எனத் தனது சுயமரியாதையை இழந்தார். உடல் எடை அதிகரித்தது, குடும்பத்தை விட்டு விலகினார், மனநல மருத்துவ உதவியையும் நாடினார்.

“ஒரு நாள் கண்ணாடியில் என் பிம்பத்தைப் பார்த்தபோது எனக்கே அடையாளம் தெரியவில்லை. உடல் எடை மிக அதிகமாகியிருந்தது. நான் எதையாவது மாற்றாவிட்டால், உயிர் பிழைக்க மாட்டேன் என்று எனக்குத் தோன்றியது” என்று மனம் வலிக்க கூறுகிறார். ஆனால் அந்த தருணம் தான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. ராகேஷ் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ (Intermittent Fasting) எனப்படும் இடைவெளி விட்டு உண்ணும் முறையை தொடங்கினார். உடல் எடை வேகமாக குறைய தொடங்கியது. அதைவிட முக்கியமாக, அது அவரது தன்னம்பிக்கையை மீட்டெடுத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது.

மெதுவாகத் தனது இருண்ட அறையில் இருந்து வெளியே வந்து, வெறும் 5,000 ரூபாய் மாத சம்பளத்திற்கு ஒரு ஜிம் பயிற்சியாளராக வேலையில் சேர்ந்துள்ளார். அங்கு பயிற்சி அளிப்பதோடு, துப்புரவு பணிகளையும் செய்ய தயங்கவில்லை. அவரின் ஐந்து வயது மகள் ஒரு சாக்லேட் கேட்கும்போது, அதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்க கூடாது என்று நினைத்தேன். அதன் பின் உணவு டெலிவரி போன்ற சிறு சிறு வேலைகளை செய்து, ஒவ்வொரு ரூபாயையும் சேமித்தேன். முன்பணம் செலுத்தும் அளவிற்கு பணம் சேர்ந்ததும், தனது சுதந்திரத்தின் அடையாளமாக ஒரு ஆட்டோவை வாங்கியதாகவும் கூறுகிறார்.

வீழ்ச்சியல்ல, இது வெற்றி!

இன்று ராகேஷ் பிழைப்பிற்காக ஆட்டோ ஓட்டுகிறார். இது தோல்வியின் அடையாளம் அல்ல, மாறாக உயிர் பிழைத்திருப்பதற்கும், கண்ணியத்திற்கும், அவர் எடுத்த சரியான முடிவுக்கும் அடையாளம். ஒரு பெரிய வெள்ளை காலர் வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுவது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ராகேஷ் அளிக்கும் பதில் யதார்த்தமானது. எனது மனநலத்தையே சிதைத்த ஒரு வேலையை நான் செய்து கொண்டிருந்தேன். எனக்காக துளியும் கவலைப்படாத, அநீதி நடக்கும் போது எனக்கு ஆதரவாக நிற்காத ஒரு நிறுவனத்திடம், சில ஆயிரம் ரூபாய்களுக்காக எனது ஆன்மாவையே விற்றிருந்தேன். திறமையற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு கொண்ட ஒரு மேலாளர் எனது திறமையை மதிப்பிட்டுக் கொண்டிருந்தார். எனது குடும்பத்திற்கோ, குழந்தைக்கோ அல்லது நான் விரும்பிய விஷயங்களைச் செய்யவோ எனக்கு நேரமில்லை. இப்படிப்பட்ட வேலையை ஒரு பயனுள்ள அல்லது கௌரவமான வேலை என்று சொல்வீர்களா?”

நான் பெற்ற சுதந்திரம்!

இன்று ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே ஆட்டோ ஓட்டுகிறேன். இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது மகிழ்ச்சியான மனிதராக இருப்பதாகவும் கூறுகிறார். உண்மையில் உங்களைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை, எனவே மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நீங்களும் கவலைப்படக்கூடாது. நான் ஒரு வேலையை இழந்திருக்கலாம், ஆனால் என்னையே நான் கண்டடைந்து விட்டேன் என்கிறார்.

Share This Article English summary

From MNC Manager to Auto Driver: Is Mental Peace the new luxury that high-paying jobs can’t buy?

Rakesh quit a toxic, high-paying corporate job to drive an auto, prioritizing mental peace over status. His story highlights choosing dignity and family over burnout. Story first published: Saturday, January 24, 2026, 11:16 [IST] Other articles published on Jan 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *